top of page

காது இரைச்சல் ஏற்படுவது ஏன்? என்ன செய்யக்கூடாது?


காது இரைச்சல் என்பது ஒரு முக்கிய விஷயம் என்பதால் அதை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காது இரைச்சல் என்பது ஒரு நோய் அல்ல என்றும் அது ஒரு உணர்வு என்றும் அது ஒரு நோயின் வெளிப்பாடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

காதில் இரைச்சல் அல்லது விசில் அடிப்பது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காதில் சுரக்கின்ற மெழுகு கட்டியாக மாறுவதால் காதடைப்பு ஏற்படும் என்றும், அடிக்கடி சளி பிடித்தாலும் காதில் நீர் கோர்த்து கொண்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும் இயந்திரங்கள் மத்தியில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி காது இரைச்சல் பிரச்சனை வரும் என்றும் இயர்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கும் காது பாதிப்பு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது


எனவே காது இரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கு அதிகமாக இயர்போனை பயன்படுத்தக்கூடாது என்றும் காதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கைமருத்துவம் காதுக்கு பார்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


காதில் ஓயாத இரைச்சல் தொல்லை


காதில் எப்போதும் ஒரு முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் தீர்வு என்ன? விஸ்வநாதன், செங்கல்பட்டு

காதில் கேட்கும் முழக்கத்துக்கு tinnitus என்று பெயர். வெளியில் சத்தம் இல்லாதபோது காதின் உட்புறத்தில், இது கேட்கும். இது மென்மையாகவோ, ஓசை அதிகமுள்ளதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மணி அடிப்பதைப் போன்றோ, சங்கு ஊதுவதைப் போன்றோ, கடல் அலையைப் போன்றோ, ஹார்ன் ஒலிப்பதைப் போன்றோ, பறவைகளின் ஒலியைப் போன்றோ, விசில் சப்தம் போன்றோ கேட்கலாம். சில நேரம் காதுக்குள் காற்று அடைத்தது போன்றும், தண்ணீர் ஓடுவது போன்றும்கூட இருக்கும். இப்படிப் பலருக்கும் இருக்கிறது. சிலருக்கு ஒரு சில நிமிடங்களே இருக்கும். தொடர்ந்து இப்படி இருந்தால் கவனம் செலுத்த முடியாது, தூங்க முடியாது.

காரணம் என்ன? செவி அழற்சியின் காரணமாகவும், செவியில் மெழுகு அடைவதாலும் அதிக ஓசையுடைய ஒலிகளைக் கேட்பதால் ஏற்படும் செவி மந்த நிலை காரணமாகவும், meniere's disease என்று சொல்லக்கூடிய உள்செவிப் பிரச்சினை காரணமாகவும் இது வரும்.

இந்த meniere's நோயில் காதில் முழக்கம், செவித் திறன் குறைவு, தலை சுற்றும் தன்மை, வாந்தி போன்றவை காணப்படலாம். மது அருந்துதல், அதிகக் காபி குடித்தல், மாத்திரைகள் காரணமாகவும் இது ஏற்படலாம்.

செவித் திறன் குறைவாக இருக்கிறதா என்றும், ரத்தஅழுத்தம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். மூளையை ஸ்கேன் எடுத்துக் கட்டிகள் உள்ளனவா என்றும், ரத்தநாளக் கட்டிகள் உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும். இரவு நேரம் இப்படிக் கேட்கலாம். இரவு நேரத்தில் புறச் சூழல் அமைதியாக உள்ளதால் இதை நாம் தெளிவாக உணர முடியும்.

ஆயுர்வேத மருந்துகள் காதில் முழக்கம் ஏற்படுவதை ஆயுர்வேதத்தில் கர்ணநாதம் என்று சொல்வார்கள். ஆகாச வாயு தத்துவத்தாலும், சப்தக் குண ஸத்வம் அதிகரிப்பதாலும் இது வருகிறது. உட்காது பாதிப்பினாலேயே இது அதிகம் வருகிறது. இந்த நோயில் வாதத்தைத் தணிக்கிற மருந்துகள் மிகவும் முக்கியம்.

தலைக்கு லாக்ஷாதி தைலம், க்ஷீரபலா தைலம், தான்வந்தர தைலம் போன்றவை சிறந்தவை. இரவு கல்யாணக கிருதம் 20 மி.லி., 1/2 ஸ்பூன் இஞ்சி சூரணம் சேர்த்துச் சாப்பிடலாம். ஜீரக சூரணம், சிருங்கப்பேராதி சூரணமும் 5 கிராம் முசுமுசுக்கை கஷாயத்தில் கலந்து கொடுக்கலாம்.


வசா லசுனாதி தைலம் என்றொரு தைலம் இருக்கிறது. காதில் நீர் ஏதும் இல்லாதபோது 1 துளி விடலாம். முருங்கை இலை, வெள்ளைப்பூண்டு கஷாயம் சாப்பிடலாம். கண்டுபாரங்கி என்றொரு பொருள் இருக்கிறது. இது காது முழக்கத்துக்குச் சிறந்த மருந்து. காதில் சீழ் வடிந்தால், அந்நிலையில் எண்ணெய் ஊற்றக் கூடாது. இது அல்லாமல் நடைமுறையில் பயன்படுத்தும் கைமருந்துகளைப் பார்க்கலாம்.

கைமருந்துகள்

  1. தேங்காய் எண்ணெய், வெள்ளை வேளைகீரை, நாயுருவி வேர், பொரித்த பெருங்காயத் தூள், பூண்டு பொடியைத் தேனுடன் சாப்பிடலாம்.

  2. தூதுவளையை நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரைக் குடிக்கலாம்.

  3. தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டிக் கசக்கிச் சாறு பிழிந்து அதில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் சப்தம் ஆகியவை குறையும்.

  4. நல்லெண்ணெயில் ஒரு கிராம்பைப் போட்டுச் சூடு செய்து, பின் அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை வலி உள்ள காதில் 2 துளி விடலாம்.

  5. முள்ளங்கிக் கிழங்கின் சாறு 50 மி.லி.யில், இஞ்சி 3 கிராம் சேர்த்துச் சாப்பிடலாம்.

  6. தும்பைப்பூ, சுக்கு, காயம் ஆகியவற்றைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.

  7. தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றைத் தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

  8. கடுகை நன்கு அரைத்து, அதைக் காதுக்குப் பின்னால் பற்று போட்டு வைக்கலாம்.

  9. பூண்டின் தோலை உரித்துத் தலைப் பக்கம் கிள்ளிவிட்டுக் காதில் வைக்கலாம்.

  10. தேனுடன் துளசிச் சாற்றைக் கலந்து குடிக்கலாம்.

  11. வேளைக்கீரை இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, இரண்டு சங்களவு சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு அதே அளவு நல்லெண்ணெயைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை காதுக்கு 2 துளி வீதம் விட்டுப் பஞ்சடைத்து வந்தால் காது இரைச்சல் குணமாகும்.

  12. அரிசித் தவிடு எடுத்து ஒரு கைக்குட்டையளவு துணியில் கட்டி ஓடு (உடைந்த ஒட்டை) அடுப்பில் போட்டுச் சுட்டு அதைத் தவிட்டுடன் வைத்துக் கட்ட வேண்டும். ஓட்டில் உள்ள சூடு கைக்குட்டையளவு போகும். காதைச் சுற்றி ஒத்தடம் கொடுக்கப் பலன் கிடைக்கும்.

  13. வெள்ளைப் பூண்டு, மிளகு இரண்டையும் இடித்துத் துணியில் வைத்துக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும். ஒரு துளி காதில் விட, முதலில் எரியும். பின் குளிர்ந்துவிடும்.

  14. கடல் நுரை வாங்கி வந்து, வேப்பெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, இளஞ்சூட்டோடு சில துளி காதில் விடலாம்.

  15. தைவளை இலையை இடித்துச் சாறெடுத்து நல்லெண்ணெய் கலந்து சூடேற்றிக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி காதில் இரண்டு சொட்டு விடலாம். காதில் ஓசையை நிறுத்த சில யோசனைகள்

  16. காபி, டீ குடிப்பதை நிறுத்துவது நல்லது

  17. அதிக ஓசையுள்ள இடங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம்

  18. தலை அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  19. காதில் செவித் திறன் அறியும் பரிசோதனை (audiometry test), தலைக்கு MRI போன்றவற்றை நவீன மருத்துவர்கள் பார்ப்பார்கள்.

  20. காதில் அழுக்கு இருந்தால் அதை எடுப்பார்கள்.

  21. ஒருசிலருக்குக் காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.


உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in


காதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்? | காதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்?


கேட்பது இசையா, இரைச்சலா என நாம் உணர்ந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட காதுக்குள்ளேயே இரைச்சல் ஏற்படுவது பலருக்கும் பெருந்தொல்லையாக இருக்கும்.

இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. உலக அளவில் முதியோருக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

எது காது இரைச்சல்? காது இரைச்சல் (Tinnitus) என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு; அறிகுறி. காது இரைச்சலுக்கான காரணம் காதிலும் இருக்கலாம்; உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம். சில மனநோயாளிகள்கூடக் காதில் இரைச்சலும் குரலும் கேட்பதாகக் கூறுவார்கள். காது, காதிலுள்ள எலும்புகள், காதிலிருந்து மூளைக்குச் செல்லும் காது நரம்பு, மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும்.

காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, `இஸ்ஸ்ஸ்…’ என்ற இரைச்சலோ, குக்கர் விசில் அடிப்பது போன்றோ, புயல் மாதிரிப் பேரிரைச்சலோ கேட்பதாக இருந்தால் அந்த நபருக்கு ‘காது இரைச்சல்’ இருப்பதாக அர்த்தம். இந்த இரைச்சலின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு இரைச்சல் தொடர்ச்சியாகக் கேட்கும்; இன்னொருவருக்கு விட்டு விட்டுக் கேட்கும். ஒரு சிலருக்கு இரைச்சல் தாங்கமுடியாத அளவுக்குக் கடுமையாக இருக்கும்.

பாதிப்புகள் என்ன? சுற்றுப்புறம் அமைதியாக இருந்தால், காதுக்குள் இரைச்சல் அதிகமாகக் கேட்கும். குறிப்பாக, இரவில் இது அதிகம் தொல்லை தரும். உறக்கம் வராது. மனக் குழப்பத்துக்கு அடிபோடும். நினைவாற்றல் குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும். பகல் நேரப் பணியில் கவனம் செலுத்துவது சிரமம் தரும். உடல் சோர்வாக இருக்கும்.

காரணம் என்ன? காது இரைச்சலுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைத் தற்காலிகக் காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம். காதுமடலைச் சேர்த்துச் சிறு துவாரமாகக் காதுக்குள் செல்கிற வெளிக்காதுக்குழலில், இயற்கையாகச் சுரக்கிற மெழுகு உருண்டு திரண்டு கட்டியாகிக் காதை அடைத்துக்கொண்டால், அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக்கொண்டால், காளான் தொற்று ஏற்பட்டால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். இவையெல்லாமே தற்காலிகமாகக் காது இரைச்சலை உண்டாக்குபவை. காதில் உள்ள அழுக்கை / அயல் பொருளை அகற்றிவிட்டால் அல்லது காளான் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவிட்டால் காது இரைச்சலில் இருந்து விடைபெறலாம். ஜலதோஷம் பிடிப்பதால்கூடச் சில நேரங்களில் தற்காலிகமாகக் காது இரைச்சல் உண்டாகும்.

அதேநேரத்தில் சில காரணங்களால் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும். முதுமை இதற்கு முக்கியக் காரணம். வயதாக வயதாக நடுக்காது எலும்புகள், காக்ளியா எனும் நத்தை எலும்பு மற்றும் காது நரம்பிழைகள் சிதைவடைவதால் காதுக்குள் இரைச்சல் தொடங்குவது வழக்கம். காதுக்குப் போகும் ரத்தம் முதுமையில் குறைவதாலும் காதில் இரைச்சல் ஏற்படுவதுண்டு.

வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கிற செவிப்பறையில் துளை விழுந்துவிட்டால், காது இரைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுபோன்று நடுக்காதுக்குள் நீர் கோத்துக்கொண்டால், சீழ் பிடித்துவிட்டால் காது இரைச்சல் ஏற்படும். நடுக்காதில்தான் நம் உடலிலேயே மிகச் சிறிய எலும்புகளான சுத்தி, பட்டடை, அங்கவடி எலும்புகள் உள்ளன.

இவற்றில் ‘எலும்பு முடக்கம்’ (Otosclerosis) எனும் நோய் தாக்கும்போது, எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்குச் செல்வது தடைபடும். அப்போது காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும். அடுத்து, தொண்டையையும் காதையும் இணைக்கிற ‘காது – மூக்கு -தொண்டைக்குழாய்’ (Eustachian tube) அழற்சி அடைந்து, வீங்கிக் கொண்டாலும் காது இரைச்சலுக்கு வழி அமைக்கும். காதில் அடிபட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

ஒலி மாசு தரும் ஆபத்து இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசு இல்லாத இடமே இல்லை எனலாம். பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சத்தத்தைத் தொடர்ந்து எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால் அது காதைக் கட்டாயம் பாதிக்கும். எப்படி?

உட்காதில் உள்ள ‘காக்ளியா’எனும் நத்தை எலும்பில் ஒலி அதிர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்கிற நரம்பிழைகள் ஏராளமாக உள்ளன. காதுக்குள் நுழைகிற பலத்த ஒலி அலைகள், இந்த நரம்பிழைகளைச் சிதைத்துவிடுகின்றன. அப்போது இவை அசாதாரண ஒலியை உண்டாக்குகின்றன. இவற்றின் விளைவு, காது இரைச்சல்.

முக்கியமாகப் பலத்த சத்தத்துடன் இயங்குகிற இயந்திரங்களுக்கு நடுவில் வேலை பார்ப்பவர்கள், ‘ராக்’போன்ற அதிகமான சத்தத்தை வெளிப்படுத்தும் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், விமான நிலையத்துக்கு அருகில் குடியிருப்பவர்கள், ‘வாக்மேனை’அதிக நேரம் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி வெடிச் சத்தம் கேட்பவர்கள் ஆகியோருக்கு இம்மாதிரியான நரம்புப் பிரச்சினை வந்து காதுக்குள் இரைச்சல் ஏற்படுவது உண்டு. குழந்தைகளுக்கும் காது இரைச்சல்

சிலருக்குப் பிறவியிலேயே நரம்புக் கோளாறு ஏற்பட்டிருந்தால், சிறு வயதிலிருந்தே காதுக்குள் இரைச்சல் கேட்கும். மிக நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி நரம்புக் கோளாறு ஏற்பட்டுக் காது இரைச்சலுக்கு வழிவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும்.

இது தவிர உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, ரத்தச் சோகை, ஒற்றைத் தலைவலி, குறை தைராய்டு, மினியர் நோய், மூளையில் ஏற்படுகிற ரத்தக் குழாய் பாதிப்புகள், புற்றுநோய் கட்டிகள், தாடை எலும்பு பாதிப்பு போன்றவையும் காது இரைச்சலுக்கு மேடை அமைக்கும். புகைபிடிப்பது, மது அருந்துவது, ‘காஃபீன்’ மற்றும் குளிர்பானங்களை அதிகமாகப் பருகுவது போன்றவை காது இரைச்சலை அதிகப்படுத்தும். மாத்திரைகள் கவனம்!

பல்வேறு நோய்களுக்காகத் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடும்போது அவற்றின் பக்க விளைவாகவும் காது இரைச்சல் ஏற்படலாம். எடுத்துக்காட்டாகக் காசநோய், மலேரியா, மன நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்குத் தரப்படுகிற சில மாத்திரை, மருந்து, ஊசிகள் இம்மாதிரியான பக்கவிளைவைக் கொண்டுள்ளன. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மாத்திரைகளில் 200-க்கும் மேற்பட்டவை காது இரைச்சலுக்குக் காரணமாகலாம் என்கிறது மத்தியச் சுகாதாரத் துறை.

என்ன சிகிச்சை?

ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI ஸ்கேன், MRN ஸ்கேன், MRA ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் காது இரைச்சலுக்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இது முழுமையாகக் குணமாகும்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல் காது இரைச்சல் உள்ளவர்களின் காதுக்குள் அந்த இரைச்சலுக்குச் சவால்விடும் வகையில் அதிக டெசிபல் உள்ள மற்றொரு ஒலியைச் செலுத்தினால், இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் அது தடுத்துவிடும். இதற்கு ‘மறையொலி தொழில்நுட்பம்’ (Masking technique) என்று பெயர். வாக்மேனின் இயர்போன்மாதிரி ‘மறையொலிக் கருவி’யை (Masker) காதில் பொருத்தி, இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

எலும்பு முடக்க நோய் காரணமாகக் காதுக்குள் இரைச்சல் ஏற்படுமானால், அங்கவடி எலும்பைச் சீராக்கும் அறுவைச் சிகிச்சை (Stapedectomy) மேற்கொள்ளப்படும். காது இரைச்சலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்காதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் அறுவை சிகிச்சையும் (Labyrinthectomy) நடைமுறையில் உள்ளது. காது இரைச்சலுக்கு டி.ஆர்.டி. (TRT – Tinnitus retraining therapy), டி.எம்.எஸ். (TMS - Transcranial Magnetic Stimulation) எனும் சிகிச்சைகள் இப்போது பிரபலமாகிவருகின்றன.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர் தொடர்புக்கு: gganesan95@gmail.com


Thanks to Sources.

Credited to https://bit.ly/3v9bwOu

Credited to https://bit.ly/3WBcDCe

1 view

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page